மக்கள் அநாதைகளாகிவிடுவர்



(க.கிஷாந்தன்)

மலையக பெருந்தோட்ட பகுதிகள் ஐயாயிரம் ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடும் நிலைக்கு தள்ளப்படவுள்ளது என தெரியவந்துள்ளது. இந்நிலை உருவாகுமேயனால் நமது மக்கள் அநாதைகளாகிவிடுவர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கொந்தளிக்கின்றார்.

கூட்டு ஒப்பந்தம் விதிகளை களனிவெலி பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு செயலாற்றும் விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று 05.12.2016 அன்று காலை அட்டன் லக்ஷமி மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது இங்கு கலந்து கொண்ட பொது மக்கள் மற்றும் களனிவெலி பெருந்தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கும், மூஸ்லீம் மக்களுக்கும் ஒரு சில தமிழ் மக்களுக்கும் கிராமங்கள் என்று இருக்கின்றது. ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு கிராமங்கள் இருந்தும் அதை முறையாக பராமரிக்கும் உரிமைகள் அற்று காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் நமது உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காகவும், பூர்வீக சொத்தினை பாதுகாத்து கொள்ளவும் நாம் பாடுபடும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் நமது சமூகத்திற்கு பின்புலமாக எத்தனையோ வெட்டுகள்  இருக்கின்ற பொழுதிலும் அதை உணராத சிலர் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் அரசியலையும் தொழிற்சங்கத்தையும் செய்து வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கு வீடும், காணியும் அவசியம் தான். இல்லை என்று மறுப்பதற்கு இல்லை. அதற்கு அப்பால் அரசியல் உரிமை எமக்கு தேவை. இதை யாரும் உணர்ந்து செயல்படுவதில்லை.

ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் விவசாயம், மருத்துவம், அபிவிருத்தி நலன்புரி சேவை என மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தோட்ட பகுதிகளுக்கும் செயலாற்ற வேண்டும் என்பது இ.தொ.காவின் கோரிக்கையாக அமைகின்றது.

1979ம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் நகரிலும், கிராமங்களிலும் மக்கள் தாக்கப்பட்டனர். ஆனால் தோட்டப்பகுதிகளுக்கு கலவரக்காரர்கள் எட்டி பார்க்கவில்லை. இதற்கு காரணம் அரசியல் அந்தஸ்துடன் இ.தொ.கா இருந்தமையே! இன்று அவ்வாறு இல்லை.

ஆகையினால் கல்லு நாட்டி வீடு கட்டினால் மட்டும் போதாது அரசியல் அந்தஸ்தையும் பலத்தையும் பெருக்கிக் கொள்ளும் மாவட்ட உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். அப்போது அரசாங்கத்திடம் உரிமைகளை பெரும் வல்லமை பிறக்கும் என்றார்.

இந்நிகழ்வில் களனிவெலி பெருந்தோட்ட நிர்வாக பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் உள்ளிட்ட 18 தோட்டங்களை சேர்ந்த தோட்ட அதிகாரிகள், நிறைவேற்று பணிப்பாளர்கள், முகாமையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.