92 பேரை ஏற்றுக் சென்று கருங்கடலில் விழுந்து விட்ட ரஷ்ய ராணுவ விமானத்தை தேடும் பணி மிகப் பெரிய அளவில் இடைவிடாமல் நடந்து வருகிறது.
சோச்சி நகருக்கு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையில், 3000-க்கும் அதிகமான கப்பல்கள், ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்மூழ்கிகள் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
சிரியாவுக்கு சென்று கொண்டிருந்த இந்த டியு-154 ரக விமானத்தில் ரஷ்ய ராணுவத்தினர், புகழ்பெற்ற அலெக்ஸான்ட்ராஃப் ராணுவ இசைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
சோச்சி நகரிலிருந்து சிரியாவை நோக்கி புறப்பட்ட இந்த விமானம், கிளம்பிய சிறிது நேரத்திலே நொறுங்கி விழுந்தது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடலில் விழுந்த இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (திங்கள்கிழமை) ரஷ்யாவில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

