சார்க் வலய நாடுகளின் எதிர்காலம் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பில் தெற்காசிய தலைவர்களும் வர்த்தக சமூகத்தினரும் உலக பொருளாதார மாநாட்டில் இன்று கலந்துரையாடியுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உரையாற்றினார்.
இலங்கை சார்க் வலய நாடுகளுக்கு புறம்பாக வேறு நாடுகளுடனும் இரு தரப்பு உறவுகளை பேணுவதற்கு எண்ணியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பிரதமர் உரையாற்றிய போது…
நாம் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுக் காலப் பகுதியிலேயே திறந்த பொருளாதாரத்திற்குள் பிரவேசித்தது. இந்தியாவால் தற்போது மாற்றத்தை உருவாக்க முடியும். எனினும் நாம் இன்னமும் உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டு நாட்டு மக்களை வேறு நாடுகளில் தொழிலுக்கு அனுப்பும் காலணித்துவ பொருளாதாரத்தையே கொண்டுள்ளோம். நாம் வங்காள விரிகுடா நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். நாம் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செயற்படுகின்றோம். எனினும் பங்களாதேஷை எடுத்துக் கொண்டால் அவர்களது செயற்பாடுகள் வித்தியாசமானது. நாம் அனைவரும் இரு தரப்பு உறவுகளை பேணி அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஆராயலாம். இதற்கு மேலதிகமாக எம்மால் வேறு எதனையும் செய்ய முடியாது.

