ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அணுகுமுறையை பிரிட்டன் மேற்கொள்ளாது என்று தெரீசா மேயின் பேச்சாளர் ஒருவர் இது குறித்து தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் தெரீசா மே ஆவார்.
முன்னதாக, டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்து விட்டார் என தெரீசா மே விமர்சனம் செய்யப்பட்டார்.
இதனிடையே, டிரம்பின் தடையுத்தரவு குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, துன்புறுத்தல், பயங்கரவாதம் மற்றும் போரினால் தங்கள் நாட்டை விட்டு தப்பி வெளியேறுபவர்களை, அவர்கள் எந்த நம்பிக்கையை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், தனது நாடு வரவேற்கும் என்று தெரிவித்தார்.

