தேசத்துரோகிகள் தேசப்பற்றுள்ளவர்களாகப் பிரகடனம்



சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் தேச துரோகிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட 81 பேரை தேசப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் இன்று (புதன்கிழமை) இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வெளியிடப்படவுள்ளது.

இன்று வரலாற்று சிறப்பு மிக்க கண்டி , மகுல்மடுவ வலாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
1818-ஆம் ஆண்டு தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஊவா வெள்ளச்ச பகுதியில் புரட்சியில் ஈடுபட்ட 81 பேர் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. மேலும், சிலர் நாடு கடத்தப்பட்டனர்.
இன்று நடைபெறவுள்ள நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தேசத்துரோகிகள் என்ற அறிவித்தலை ரத்துச் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் தேசப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இது சம்பந்தமாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்று வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த அறிவித்தல் விடுக்கப்படவுள்ளது.