யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பிரதான நபர்கள் கைது





வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

தனஞ்சயன் மற்றும் பாரத், விக்ரம் என்ற மூவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் மற்றும் கொட்டேனா பொலிஸார் இணைந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான நபர்கள் மூவரும், தப்பி ஓடி கொட்டேனா பகுதியில் வீடொன்றில் மறைந்து வாழ்ந்து வந்தனர். 

குறித்த நபர்கள் தொடர்பாக பொலிஸார் தேடுதல் நடாத்தி வந்த நிலையில் கொட்டேனா பகுதியில் மூவரும் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக பல விசாரணைகளை மேற்கொண்டதுடன், மூவர் தொடர்பான தகவல்களை வெளியிடவும் பொலிஸார் தயக்கம் காட்டி வந்த நிலையில், குறித்த மூவரும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனர். 

இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.