டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தினகரன் கைது செய்யப்பட்ட தகவலையடுத்து, சென்னையில் அது பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், 'ஆம். இந்தக் கைது சம்பவத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். மத்தியில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருப்பதால்தான், இதுபோன்ற தவறுகள் எல்லாம் வெளிக்கொண்டுவரப்படுகின்றன.
குற்றங்களைத் தடுப்பதில் பா.ஜ.க முன்னணியில் உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணம். சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. ஓட்டுக்கும் பணம் கொடுக்கிறார்கள். ஓட்டு போடக்கூடிய சின்னத்துக்காகவும் பணம் கொடுக்கிறார்கள்.
பணம்தான் பிரதானம் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, கைதுசெய்த நேர்மையான அதிகாரிகளைக் குறைகூறுவது வேடிக்கையானது. தினகரன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக சில கம்யூனிஸ்ட் தலைவர்களே சொல்லி வருவதுதான் வேடிக்கையாக உள்ளது. நேர்மையாகச் செயலாற்றுபவர்களுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்க வேண்டும். எம்.ஜி.ஆர் உருவாக்கிய சின்னம், ஜெயலலிதா வளர்த்தெடுத்த சின்னம். அது, நேர்மையாளர்களுக்குக் கிடைக்கட்டும் என்பதுதான் என் கருத்து', என்று தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment