ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் தற்கொலை குண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது 42 பேர் காயமடைந்துள்ளனர்; பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கள் எழுந்துள்ளன
நகரில் மேற்கு பகுதியில் பெரும்பாலும் ஷியா முஸ்லிம் மக்கள் வசிக்கும் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில், சுரங்க அமைச்சகத்தின் அரசு ஊழியர்கள் சென்ற பேருந்து தாக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர். தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பால் காபூலில் சமீபகாலமாக பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சம்பவ இடத்தை போலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். அரசாங்க துணை தலைமை நிர்வாகி முகமத் மொஹகெக்கின் வீட்டிற்கு அருகில் இந்த வெடிகுண்டுச் சம்பவம் நடைபெற்றது.

"இந்த கார் குண்டு தாக்குதல் மொஹகெக்கின் வீட்டை குறி வைத்ததாக நாங்கள் கருதுகிறோம். ஆனால் அது பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம்" என்று முகமத் மொஹகெக்கின் செய்தி தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.