தடுமாறுகின்றது இலங்கை.தடைதாண்டுகிறது இந்தியா



இந்திய அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பலோ வன்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
352 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பலோ வன்னில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 19 ஓட்டங்களை பெற்றிருந்தது.
கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இந்திய அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
விருதிமான் சஹா 13 ஓட்டங்களுடனும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓட்டத்துடனும் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்டியா டெஸ்ட் அரங்கில் தனது கன்னி சதத்தை எட்டினார்.
ஹர்திக் பாண்டியா இந்தப்போட்டியில் 86 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்திருந்ததோடு , அதில் 8 பவுன்டரிகளும் 7 சிக்சர்களும் உள்ளடங்கின.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 487 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அந்த இலக்கை நோக்கி முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் 38 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மாத்திரம் அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற்றதோடு , இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 135 ஓட்டங்களுக்குள் முடிவுக்கு வந்தது.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
352 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பலோ வன்னில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் முதல் விக்கெட் 15 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
உபுல் தரங்க 07 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.