ரோஹிஞ்சா அகதிகள் உணர்வுகள் என்ன?



மியான்மரில் சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்முறையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த ரோஹிஞ்சா அகதிகளை இந்தியா வெளியேற்றும் என்று இந்திய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த கருத்து பற்றிய பெரிய அளவு விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே சென்னையில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வாழ்கிறார்கள்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சுசியின் மியான்மாரிலிருந்து, வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் சிறு எண்ணிக்கையிலான, ரோஹிஞ்சா இன அகதிகள் இங்கு பாதுகாப்பாகவே உணர்வதாகக் கூறுகிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நெருங்கிய சொந்தங்களுடன் சென்னை வந்துசேர்ந்த 18 ரோஹிஞ்சா அகதி குடும்பங்கள் கேளம்பாக்கம் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
47 குழந்தைகள் உட்பட 94 நபர்கள் அடிப்படைத் தேவைகளுடன் நலமுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
மியான்மாரில் உள்ள ரோஹிஞ்சா இனத்தவர்களுக்கு நேரும் பிரச்சனைகளை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பார்ப்பதாகவும், அது அவர்களுக்கு கவலைதருவதாக கூறுகிறார்கள்.
தமிழகத்தில் தஞ்சமடைந்த ரோஹிஞ்சாக்கள்
இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்துவரும் ரோஹிஞ்சாக்களை வெளியேற்றுவது குறித்து இந்திய உள்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு பேசியுள்ளார் என்று குறிப்பிட்டபோது அந்த அறிவிப்பைப் பற்றிக் கேள்விப்படவில்லை என்று தெரிவித்தனர்.
''எல்லா இடங்களிலும் எங்களை விரட்டுகிறார்கள். இந்தச் சமயத்தில் தாய் போல எங்களை அரவணைத்துக் கொண்டது தமிழ்நாடுதான்.
இங்கே இருக்கும்வரை எங்களுக்கு பயமில்லை,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முகமது யூசப் (24).
40 நாளான குழந்தையுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றபோது குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? இந்தியாவுக்குப் போ என்று முகவர் ஒருவர் சொன்னதால் இந்தியா வந்ததாகக் கூறுகிறார் யூசப்.
''இருபது நாட்களுக்கு முன்னால என்னோட அம்மாவோட, அண்ணா தங்கச்சிக்கிட்ட பேசினேன்.
அவுங்க வீட்ட விட்டு வெளிய வரமுடியாம அங்கேயே இருக்காங்க. சாப்பாடு கூட சாப்பிட முடியல.. கதவு மூலையில நின்னுட்டு இருக்காங்க..நாங்க பேசும்போது ஒரே குண்டுசத்தம். வெளியே போனா புத்திஸ்டுங்க அடிக்கறாங்க..'' என்றார் அவர்.
''தொடர்ந்த ஷகீப், ''வெளிநாட்டுல எங்க மக்கள் நல்ல இருக்காங்க.. எங்க ஊரில ஏன் இப்படி பண்றாங்க? இன்னும் 15 நாள்ல எங்க ஊரில இருந்த எல்லாருமே செத்துடுவாங்கலாம்.
என்னோட அம்மாகூட அழுவாங்க..மத்தவங்க சந்தோசமா இருப்பாங்க. நாங்க மட்டும் ஏன் அழுதுட்டே இருக்கனுமா?'' என்றார்.
மியான்மாரில் அமைதி பிறக்கவேண்டும் என்று பெரியவர்கள் தினமும் தொழுகை நடத்துகிறார்கள்.
தங்களது சொந்த ஊரில் வாழவேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், அதைவிட தங்கள் இனத்தின் மீது நடத்தப்படும் வன்முறை அவர்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது.