உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து




(க.கிஷாந்தன்)

வெலிமடை அம்பகஸ்தோவ நகரில் உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் 19.10.2017 அன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வந்தனர்.

ஊவா பரணகமை குமாரபட்டி கிராம சேவகர் பிரிவிலுள்ள வல்கணடிய குளத்தின் எல்லையில் சுமார் 100 வருடங்களுக்கும் அதிக காலமாக வசித்து வரும் தம்மை பிரதேச செயலாளரின் தன்னிச்சையான தீர்மானத்தின்படி வெளியேற்ற முற்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய அப்பகுதியில் உள்ள 4 வீடுகளை மாத்திரம் குறித்த பகுதியை விட்டு அகற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ள போதிலும், பிரதேச செயலாளர் நீதிமன்ற அனுமதியற்ற மேலும் சில வீடுகளை அகற்றியுள்ளதாகவும், இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

டயர்களை எரித்து சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி மக்கள் சுமார் 2 மணித்தியாலயங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.