பஸ்ஸில் குண்டுத்தாக்குதல் நடத்தியவருக்கு ஆயுள் தண்டணை



2008 ஆம் ஆண்டு பிலியந்தலையில் பஸ் ஒன்றின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தி 30 பேரை கொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கினார்.

குற்றவாளிக்கு எதிராக சட்ட மா அதிபரால் 94 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் 93 குற்றச்சாட்டுகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 94 ஆவது குற்றச்சாட்டுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பிலியந்தலை பஸ் தரிப்பிடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 30 பயணிகள் பலியானதுடன், 42 பேர் காயமடைந்திருந்தனர்.