எஸ்.தவபாலன்
“வெளிநாட்டுக் கம்பனிகள் திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை பிரதேசங்களின் கடற்கரை மணலிருந்து 'இல்மனைட்டை' பிரித்தெடுப்பதற்காக பெருவாரியாக ஏற்றிச் செல்வதற்கு ஒழுங்குள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சூழல்பாதிப்பு ஏற்படும். இதனை எமது மக்கள் விரும்பவில்லை. இதனோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதமின்றி இச் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான எஸ். இராசையா தெரிவித்தார்.
அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
“இயற்கைக்கு நாம் பாதுகாப்புக் கொடுத்தால், அது நமக்கு பாதுகாப்புத் தரும். அதை சுரண்டக்கூடாது. அதனை நாம் புரிந்து கொண்டு செயற்படவேண்டும்.
“கடந்த 2004 இல் சுனாமியின் தாக்கத்தை கடற்கரையில் உள்ள மணல் திட்டுக்களும், கண்டல் காடுகளுமே ஓரளவுக்கு தடுத்தன. அதனால் காரைதீவுக்கும், பாணமைக்கும், தாக்கம் குறைந்திருந்தது.
“சரியான திட்மிடாத செயற்பாட்டால், ஒலுவிலில் துறைமுகம் கட்டப் புறப்பட்டது. இப்போது ஒலுவிலை கடல் காவு கொள்கிறது.
“அப்படியான ஒருநிலை திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை பிரதேசங்களுக்கு வராமல் விடாது. அதற்கு இந்த மண் விற்பனை வழிகோலும்.
இது நிறுத்தப்படாவிட்டால், மக்களைத் திரட்டி திருக்கோவில் பிரதேச செயலகத்துக்கு முன்பதாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி வரும் என்பதை முன்கூட்டியே சொல்லிவைக்கிறோம்” என்றார்.


Post a Comment
Post a Comment