“வாகன விபத்துகளால் இலங்கையில் நாளொன்றுக்கு 6 பேர் வீதியில் இறக்கின்றனர்” என, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
“பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வீதி விபத்து, முதலுதவி தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, ஒலுவில் கிராமிய சுகாதார நிலையத்தில் இன்று (06) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“பாடசாலை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டியில் மூன்று மாணவர்களுக்கு மேல் ஏற்றிச் செல்ல முடியாது. முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதனை மீறி, சுமார் 10 மாணவர்களை ஏற்றிச் செல்கின்றார்கள். இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன.
“விபத்தில் காயமடைபவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு பாரிய நிதி செலவாகின்றது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பின்னடைவு ஏற்படும்.
“வாகன சாரதிகள், வீதி ஒழுங்குகளைச் சரியான மறையில் கடைப்பிடிப்பதில்லை. போட்டிக்கு வாகனங்களைச் செலுத்துவதால், அதிகமான விபத்துகள் ஏற்படுவதாக, ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
“ஆபத்தான நிலையிலுள்ள ஒருவரை வாகன சாரதிகள், மனிதாபிமானத்துடன் செயற்பட்டு விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவருடைய உயிரைக் காப்பாற்றக் கூடிய நிலமை ஏற்படும்.
“வீதியில் விபத்தில் சிக்கிய ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
“பெற்றோர்கள், சிறுவர்களுக்கு வாகனங்களைச் செலுத்துவதற்குக் கொடுக்கின்றார்கள். இது சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்.
“நாட்டில் சட்டம் எல்லோருக்கும் சமமானது. அதனை நாம் எல்லோரும் கடைப்பிடிப்போமானால், சிறந்த நாடொன்றைக் கட்டியெழுப்ப முடியும்” என்றார்.


Post a Comment
Post a Comment