நின்றது,”உதய தேவி”



மட்டக்களப்பு கொழும்பு உதய தேவி புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து, தினமும் காலை 6.10க்கு கொழும்பு நோக்கியும் கொழும்பிலிருந்து தினமும் காலை 6.05க்கு மட்டக்களப்பு நோக்கியும் சேவையில் ஈடுபட்டு வந்த உதய தேவி புகையிர சேவை, கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டது.
இயந்திர கோளாறு காரணமாக, இந்தப் புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டதாகக்  கூறப்பட்ட போதிலும், இன்னும் இந்தச் சேவை மீள ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த காலைநேர புகையிரதத்தின் மூலம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்கள் பயனடைந்து வந்தனர்.
எனினும் தற்போது இந்தச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனரெனவும் எனவே, கூடிய விரைவில், இந்தப் புகையிரதத்தின் சேவையை ஆரம்பிக்குமாறும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.