மதுபோதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழப்பு..?: உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்




நடிகை ஸ்ரீதேவி குளியலறை தொட்டியில் உள்ள நீரில் தவறுதலாக விழுந்து மூழ்கியதால் உயிரிழந்துள்ளதாக  உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியலறையில் உள்ள தொட்டியில் இருந்த தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவி மரணம் என உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் குளியல் தொட்டியில் விழுந்து மூச்சுத்திணறி இருந்துள்ளதாகவும் ஸ்ரீதேவி மரணத்தில் சதிச் செயல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்று துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீதேவி ரத்தத்தை பரிசோதித்ததில் ஆல்கஹால் கலந்திருப்பது உடற்கூறாய்வு சோதனையில் தெரிய வந்துள்ளதாக துபாய் பத்திரிகைகள் தகவல் தெரிவித்துள்ளன. உடற்கூறாய்வு முடிந்த பின்னர் ஸ்ரீதேவியின்  உடல் எம்பாமிங் செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி இறந்தது எப்படி?
துபாயி்ல் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி, நிகழ்ச்சி முடிந்து ஜூமைரா என்ற ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். அவருடன் சென்ற கணவர் போனி கபூர் மற்றும் உறவினர்கள் மும்பை திரும்பிவட்டனர். ஹோட்டலில் தனியாக தங்கியிருந்த ஸ்ரீதேவிக்கு ஆனந்த அதிர்ச்சியளிக்கும் விதமாக அவருடைய கணவர் போனி கபூர் சனிக்கிழமை மீண்டும் துபாய் சென்றுள்ளார்.

இரவு உணவுக்கு செல்ல தயாராகுமாறு கணவர் கேட்டுக்கொண்டதை அடுத்து முகம் கழுவ சென்ற ஸ்ரீதேவி, 15 நிமிடங்கள் கடந்தும் குளியல் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து கணவர் போனி கபூரும் அவருடைய நண்பர்களும் கதவை உடைத்து பார்த்தபோது ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவர்கள் மருத்துவர்கள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவர்கள் திடீர் மாரடைப்பால் ஸ்ரீதேவி உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.