(க.கிஷாந்தன்)
டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்திலுள்ள குடியிருப்பொன்றின் சுவர்களில் 26.04.2018 அன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்புகளுக்கு புவியதிர்வு காரணமல்ல என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் 5 ஆம் இலக்க லயன் குடியிருப்பின் சுவர்களில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் பீதிக்குள்ளாகினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப அந்தத் தோட்டத்துக்கு விஜயம் செய்த மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் நிலைமைகளை ஆராய்ந்ததோடு இடர் முகாமைத்துவ அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பதிகாரி போபிட்டியவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சுவர்களின் வெடிப்புக்கான காரணத்தை கண்டறியுமாறு அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட ஆய்வாளர் மாலக்க ஹெட்டியாராய்ச்சி தரவளை மேற்பிரிவு தோட்டத்துக்கு விஜயம் செய்து ஆய்வுகளை நடத்தினார். இதன் போது மண்சரிவு அபாயமோ நிலத்தில் வெடிப்புக்களோ கண்டறியப்படவில்லை. மேலும் இலங்கையில் எப்பாகத்திலும் 26.04.2018 அன்று எவ்விதமான நில நடுக்கமும் பதிவாகவில்லை என்ற தகவலை உரிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அறிய தந்தார்.
குறிப்பிட்ட தோட்டக்குடியிருப்பின் சுவர்களில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குக் காரணம் இந்தக்குடியிருப்பு 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த நிலையிலுள்ளமையேயாகுமென்று தெரிவித்தார்.
இந்த நிலையில் டிக்கோயா தோட்ட முகாமையாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தொடர்ந்து வெடிப்புக்கள் ஏற்படகக்கூடிய நிலையிலுள்ள சுவர்களைக் கொண்ட வீடுகளைக் கொண்ட இரண்டு குடும்பங்களைத் தற்காலிக இருப்பிடமொன்றில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் குறிப்பிட்ட குடியிருப்பைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு வேறு இடமொன்றில் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப முன்னெடுப்பதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டது.


Post a Comment
Post a Comment