வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு



45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன் வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018ம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

பயிற்சி காலத்தில் அவர்களுக்கு ரூபா 20,000 கொடுப்பனவை மாதாந்தம் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் 2019 ஆண்டில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். 

அதனடிப்படையில், குறித்த பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், பின்னர் தகைமை பெறுகின்ற பட்டதாரிகளை அபிவிருத்தி அதிகாரிகள் யாப்பின் கீழ் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.