இடமாற்றத்தைக் கண்டித்து அம்பாரை சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம்



அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த பி.வணிகசிங்கவின் இடமாற்றத்தைக் கண்டித்து, அம்பாறை மாவட்டத்திலுள்ள பொது அமைப்புகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து, அம்பாறை  நகர் சுற்று வட்டார மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று (02) ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளருக்கு விதிமுறைகளுக்கு அப்பால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச கடமைகளுக்கு அரசியல் தலையீடுகள் தடையாக இருக்கின்றன எனவும் தெரிவித்து, இவற்றைக் கண்டித்து, மாவட்ட செயலாளருக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்கள் மத்தியிலும் இன, மத, பிரதேச அரசியல் வேறுபாடு காட்டாது, மிகவும் பக்க சார்பின்றிச் சேவையாற்றி வந்த மாவட்ட செயலாளரை, அரசியல்வாதியொருரின் விருப்பு, வெறுப்புக்காக அரசாங்கம் இடமாற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.