பதுளை பிரதேச சபையின் முன்றலில்




(க.கிஷாந்தன்)
பதுளை பிரதேச சபையினால் வேவெஸ்ஸ தோட்டத்தின் ஒரு பகுதியில் குப்பை மேடு ஒன்று அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள தோட்ட காணியில் குப்பை மேட்டை அமைக்ககூடாது என பலாங்கொடை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் வேவெஸ்ஸ தோட்ட மக்களும், கிராம பகுதி மக்களும் பதுளை பசறை பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் வீதியை மறித்து பதுளை பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் 01.08.2018 அன்று காலை ஈடுப்பட்டனர்.
வேவெஸ்ஸ தோட்ட மக்கள் 500ற்கும் மேற்பட்டோர் முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பதுளை பசறை பிரதான வீதியில் இரண்டு மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு மறித்து பதுளை பிரதேச சபை தலைவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பலாங்கொடை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான வேவெஸ்ஸ தோட்டத்தின் ஒரு பகுதியை குப்பை மேடு ஒன்றை அமைப்பதற்காக வேவெஸ்ஸ தோட்ட நிர்வாகம் பதுளை பிரதேச சபைக்கு அண்மையில் வழங்கியுள்ளது.
இப்பகுதியில் 500ற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களும், 15 கிராம சேவகர் பிரிவும் காணப்படும் அதேவேளை, 7 பாடசாலைகளும் அதனையொட்டி பதுளை பிரதேச சபை காரியாலயமும், சுமார் 500 மீற்றர் தொலைவில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகமும் அமைந்துள்ளது.
இது இவ்வாறிருக்க குப்பை மேடு அமைக்கும் பகுதியில் வேவெஸ்ஸ தோட்ட மக்களுக்கான குடிநீர் மற்றும் பவானைக்கான நீர் பெற்றுக் கொள்ளும் பகுதியும் காணப்படுகின்றது. ஆகையால் இவ்விடத்தில் குப்பை மேட்டை அமைப்பதனால் குடிநீர் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் என கோரிக்கைகளை முன்வைத்து இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த பிரதேச சபை தலைவர் மக்களின் கோரிக்கைகளை ஏற்று வேவெஸ்ஸ தோட்ட பகுதியில் தோட்ட நிர்வாகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட குப்பை மேடு அமைக்கும் பகுதியில் “கொம்பஸ்ட்” இயற்கை பசளை தயாரிக்கும் வேலைத்திட்டம் மற்றும் குப்பை மேடு அமைக்கும் பணியை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக எழுத்து மூலம் தெரிவித்தள்ளார்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றதையடுத்து பதுளை பசறை பிரதான வீதியின் வாகன நெரிசலும் பொலிஸாரின் கட்டுப்பபட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.