நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் பயணிப்பதற்காக ஜனாதிபதி அழைப்பு



நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் பயணிப்பதற்கு தான் உலகின் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக நேற்று (24) பிற்பகல் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமான நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

நெல்சன் மண்டேலாவின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த சமாதான உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானம் பற்றி உலகிற்கு முக்கியமான பல பாடங்களை கற்றுக்கொடுத்த நெல்சன் மண்டேலா என்ற உன்னதமான ஆளுமையை பற்றி இன்று உலகத் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

நெல்சன் மண்டேலாவின் உன்னத ஆளுமை குறித்தும், அவர் பயணித்த பாதை குறித்தும் நினைவுகூரக் காரணம், இன்று உலகம் அத்தகையதொரு பாதையில் பயணிக்காமையே ஆகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரத்தை துறத்தல் மற்றும் அதிகாரத்தை மட்டுப்படுத்தல் குறித்து அவரது ஆளுமை பல முன்மாதிரிகளை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

சமாதானம் பற்றிய பாதையை உலகிற்கு கற்றுக்கொடுத்த உன்னத மானிட ஆளுமையான நெல்சன் மண்டேலா என்ற ஆளுமைக்காக இந்த சமாதான உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். 

(ஜனாதிபதி ஊடக பிரிவு)