மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் (22) புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண்டீபன்அறிவித்துள்ளார். 

கலைப்பீடம் (இராமநாதன் நுண்கலைப் பீடம் உட்பட), விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியற் பீடம், தொழில்நுட்ப பீடம், ஆகிய பீடங்களுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. 

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன. 

விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திரும்புமாறும், விடுதிகளின் உள்ளேயும், பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றினை எடுத்துவர வேண்டும் என்றும் பதிவாளர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். 

(யாழ். நிருபர் பிரதீபன்)