44 மாதங்களின் பின்பு இலங்கை சொந்த மண்ணில் வென்றது


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களையும் மெஹிதி ஹசன் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்துவீச்சில் அகில தனஞ்சய, நுவன் பிரதீப் மற்றும் இசுறு உதான ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். 

அதன்படி இலங்கை அணிக்கு 239 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.