ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று நடைபெற்றபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கட்சியின் ஸ்தாபக தலைவரான ஜீ.எல்.பீரிஸினால், மஹிந்த ராஜபக்ஷவிற்கு கட்சியின் தலைமைத்துவம் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
'எமது குடும்பம் ஆட்சி அமைக்க முடியாது வகையில் அரசியலமைப்பை இந்த அரசாங்கம் மாற்றியமைத்தது. எமது சுதந்திரத்திற்காக நாட்டின் சுதந்திரத்தை நாம் விட்டு கொடுக்கவில்லை. நாட்டின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. எம்மை இனவாதிகள் என கூறினார்கள். நாம் அவ்வாறு கிடையாது. ஆனால் இந்த அரசாங்கம் எந்தவொரு மதத்திற்கும், மார்க்கத்திற்கும் மதிப்பளிக்கவில்லை.
நாம் வைராக்கியம் வைத்தோம் என கூறினார்கள். வைராக்கியம் வைத்து வெற்றிக் கொள்வதற்கு தற்போது எனக்கு ஒன்றும் கிடையாது. இந்த அரசாங்கம் ஜெனிவாவில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போதும், மண் சரிவு ஏற்படும் போதும், கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை குண்டு வெடிக்கும் போதும், வரி அறவிடும் போதும், கொழும்பில் குப்பை துர்நாற்றம் வீசும் போதும் அது குறித்து இந்த அரசாங்கத்திற்கு தெரியவில்லை. ஆனால் இந்த நாட்டு மக்களுக்கு அப்போது எம்மை நினைவுக்கு வந்தது.
கோட்டாபய ராஜபக்ஷ
நாட்டுக்கு எமது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், 2015ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நாட்டை விடவும் மோசமான நாடொன்றையே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அச்சமின்றி விஹாரைக்கு சென்று, அன்னதானம் கொடுக்கக்கூடிய நாடொன்றை உருவாக்க வேண்டும். கிறிஸ்தவர்கள், இந்துகள், முஸ்லிம்களுக்கு அச்சமின்றி அவர்களது மதத்தலங்களுக்கு செல்லக்கூடிய வகையிலான நாடொன்றை உருவாக்க வேண்டும்.
முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல என்ற எண்ணம் கொண்ட நாடொன்று தேவைப்படுகிறது. 365 நாட்களும் அவதானத்துடன் இருக்கக்கூடிய தலைவர் ஒருவர் தேவை. நாடொன்றில் ஒழுக்கம் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு வேண்டும். நண்பகலில் கொள்ளை, கொலை இடம்பெறுமாயின், இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு கிடையாது. அவ்வாறு ஒழுக்கம் உள்ள ஒருவர் தேவைப்படுகின்றார்.
உலகிலேயே மிக மோசமான தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என 2005ஆம் ஆண்டு யாரும் நினைக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு தமது குழந்தைகளை சுதந்திரமான ரயிலில் அழைத்து வர முடியும் என தமிழ் மக்கள் நினைக்கவில்லை. முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடத்திற்கு செல்ல முடியும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆசியாவிலேயே மிக சுத்தமான நகரமொன்றை உருவாக்க முடியும் என யாரும் நினைக்கவில்லை. நாம் அதனை செய்தோம். எதிர்காலத்தில் அவ்வாறு செய்யக்கூடிய ஒருவர் தேவைப்படுகின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷ
30 வருட காலம் வடக்கு தமிழ் மக்களின் ஜனநாயகம் இல்லாது செய்யப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்திலுள்ள நூலகத்தை எரித்தது. இந்த நிலையில், வடக்கில் மாகாண சபை தேர்தலை 30 வருடங்களின் பின்னர் நாமே அந்த தேர்தலை நடத்தினோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பின்னரே வடக்கிற்கு சென்றது. வடக்கு மக்களின் ஜனநாயகம் பறிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு ஜனநாயகத்தை மீண்டும் வழங்க வேண்டும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவை குறித்து சிந்திக்கக்கூடிய ஒருவரை நான் நினைத்தேன்" என மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரை நிகழ்த்தினார்.
'நாட்டின் நிரந்தர சுதந்திரம், சமவுரிமையை பெற்றுக் கொடுக்க நாம் முன்னின்று செயற்படுவோம். தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றாத ஒருவரே எமது வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். சட்டத்தை பாதுகாக்கக்கூடிய ஒருவர் வேண்டும். விவசாயத்துறையை மேம்படுத்தக்கூடிய ஒருவர் வேண்டும்" என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியில் உரையாற்றினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தனது உரையின் இறுதித் தருணத்தில், தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என அறிவித்தார்.