நண்பகல் வேளையில் நாம் அவதானித்தது


(க.கிஷாந்தன்)
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் 26.12.2019 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வெல் பகுதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் நுவரெலியா பகுதியிலிருந்து பாணந்துறை பகுதியை நோக்கி சென்ற கார் மோதுண்ட வேளையில், காரின் பின்னால் மடுல்சீமையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி காரின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது காரில் சென்ற மூவரும், முச்சக்கரவண்டியில் சென்ற இருவரும் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த காரை செலுத்தி சென்ற பெண் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பெண் சாரதி பாணந்துறை வைத்தியசாலையின் வைத்தியர் எனவும், அவரது இரு பிள்ளைகளுடன் நுவரெலியாவிற்கு வருகை தந்து மீண்டும் திரும்புகையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.