"கதை திருட்டு"


தமிழ் சினிமாவில் கதை திருட்டு புகார்கள் தொடர்ச்சியாக வருகின்றன. ஏ.ஆர்.முருகதாசின் சர்கார், அட்லியின் பிகில் படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வெளிவந்தன. மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஹீரோ படமும் திருட்டு கதை என்று குற்றம்சாட்டப்பட்டது.
தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜூம் ஹீரோ படம் திருட்டுக்கதை என்று உறுதிப்படுத்தினார். இதற்கு இயக்குனர் மித்ரன் மறுப்பு தெரிவித்தார். பாக்யராஜையும் விமர்சித்தார். இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பாக்யராஜ் கதைகளை திருடி படம் எடுப்பது குறித்து பேசியதாவது:-

“கதைகளை திருடி படம் எடுப்பதை இப்போது யாரும் ஒப்புக்கொள்வது இல்லை. கதை திருட்டு என்று சொல்லாமல் இந்த கதையும் அந்த கதையும் ஒத்துப்போகிறது என்றுதான் சொன்னேன். சம்பந்தப்பட்டவரை கொச்சைப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அப்படி கூறினேன். உனக்கு முன்னாலேயே அவர் கதையை பதிவு செய்து இருக்கிறார் என்று சுட்டிகாட்டினேன்.

ஆனாலும் கதை திருடப்பட்டதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். என்னதான் அடுத்தவர் சட்டையில் மாற்றம் செய்து போட்டு பொருத்தமாக இருப்பதாக காட்டினாலும் அது பழைய சட்டைத்தான். எனவே வரும் தலைமுறையினர் கதை திருட்டை செய்யாதீர்கள். கதையை திருடி படம் எடுத்தால் உருப்பட முடியாது. நீண்ட காலம் நிலைக்கவும் முடியாது.” இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.