ரணிலின் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு




இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவரும் வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை தன்வசப்படுத்தி முன்னிலை வகித்து வருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அடுத்தப்படியாக 5 லட்சத்திற்கு அண்மித்த வாக்குகளை பெற்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தில் உள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஒரு லட்சத்தை அண்மித்த வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும், இலங்கை தமிழரசு கட்சி 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளன.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, இலங்கையின் மிகவும் பழைமையான கட்சியாக திகழ்ந்த ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.

தேர்தல் முடிவுகள்

இன்று மாலை 6.30 வரை வெளியான முடிவுகளின்படி 50 ஆயிரத்தை அண்மித்த வாக்குகளை மாத்திரமே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பெற்று, பின்னடைவை சந்தித்துள்ளது,

இவ்வாறான நிலையில், வடக்கை மையமாக கொண்டு இயங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி 43 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையான வாக்குகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுவை இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கட்சி பெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரு நாடுகள் இடையே நீண்ட கால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.