"ஒரு பாலின திருமணத்துக்கு இதுவரை சட்ட அங்கீகாரம் இல்லை"




ஒரு பாலின திருமணம் இன்றுவரை சட்டப்பூர்வமாக அங்கீரிக்கப்படவில்லை என்று தனது வாதத்தை இந்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஒரு பாலின சேர்க்கை குற்றமற்றதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் பாலின சிறுபான்மையினர் குழுக்களை சேர்ந்தவர்கள், இந்து திருமணச் சட்டத்தின் (1955) கீழ் ஒரு பாலின திருமணத்தை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் முன் விசாரணைக்கு வந்தது.

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

அப்போது, ஒருபாலின திருமணத்தை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும் என்று கோரப்படும் மனு குறித்து இந்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ப்படுமா என்று நீதிமன்றம் கேட்டது.

அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, இது முழுக்க, முழுக்க சட்டம் சார்ந்தது. இதற்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது தேவையற்றது என்று தோன்றுவதாக தெரிவித்தார். இருப்பினும் அரசிடமிருந்து இது தொடர்பான தகவல்களை பெற்று பதில் மனு தாக்கல் செய்தவதாக அவர் தெரிவித்தார்.

ஒரு பாலின திருமணம்

2018ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தின், தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில் ஒருபாலின சேர்க்கை குற்றமற்றது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 (இயற்கைக்கு விரோதமான உறவு) நீக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய கலாசாரம் என்ற அடிப்படையில் இந்திய அரசு ஒருபாலின திருமணத்திற்கு இந்திய அரசு இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய விவகாரம் அதிகரித்து வருவதாகவும், இது முழுக்க சட்டம் சார்ந்தது என்றும் கூறி, இது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

இதையடுத்து, உலக முழுவதும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக கூறிய உயர் நீதிமன்றம், அடுத்த விசாரணையின்போது தற்போதைய மனுவில் திருத்தங்கள் செய்து, எவருக்கு எல்லாம் ஒரு பாலின திருமணம் மறுக்கப்பட்டது என்ற விவரத்தை குறிப்பிடும்படியும் மனுதாரர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை அக்டோபர் 21ஆம் தேதிக்கு தள்ளிவக்கப்பட்டுள்ளது.