பன்குடாவெளியில்,அதிகாரிகளைத் தாக்கிய சுமணரத்ன தேரர் பிணையில்


 


மட்டக்களப்பு, பன்குடாவெளியில் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கி அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட மூவரையும் பிணையில் செல்ல நீதிவான் ஜீவராணி கருப்பையா அனுமதி வழங்கியுள்ளார்.

இம்மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட மூவர் பன்குடாவெளியில் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டு ஆய்வுக்குட்படுத்தபடும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைக் குறித்த இடத்துக்கு வரவைழைத்து அதிகாரிகள் மூவரைக் கடுமையாகத் தாக்கி தகரக் கொட்டில் ஒன்றுக்குள் சிறைப்பிடித்து வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகரிகளின் முறைப்பாட்டுக்கமைய கரடியனாறு பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான நீதிமன்றில் தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 183,344, 323 ஆகியவற்றில் கீழ் வழக்குத் தாக்கல் செய்யபட்டடிருந்தது.

இதனடிப்படையில் ஏறாவூர் சுற்றுலா நீதிவான நீதிமன்றத்தால் சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான நீதிமன்ற நீதவான் ஜீவராணி கருப்பையா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரச தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாரினால் கடுமையான எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததன் காரணமாக சந்தேகநபர்கள் மூவரையும் தலா இரண்டு இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

சந்தேகநபர்களான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் மற்றும் அவரது உதவிளார் இருவர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.முகமட் அமீன் மற்றும் சட்டத்தரணி தாவூத் உவைஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.