ஹைதராபாத் இளம் படை,சென்னையை வீழ்த்தியது


 


இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் மிகச்சிறந்த டி20 அணிகளில் ஒன்று எ

ன்று கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியன் பிரிமியர் லீகில் தொடர்ச்சியாக தனது மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.


துபாயில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் 2020-இன் 14ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி சென்னை அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.


20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் எடுத்தது. ஆனால் சென்னை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


முதல் ஓவரிலேயே அபாயகரமான பேஸ்ட்ரோவை வீழ்த்தி ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி தந்தார் தீபக் சாஹர். அதன் பின்னர் மணிஷ் பாண்டேவும் ஆட்டமிழந்தார்.


ஐபிஎல் 2020: கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனாவைவிட பெரிய சிக்கல் எது?

ஐபிஎல்: நினைவில் நிற்கும் வீரர்களின் சர்ச்சைகள்

ஆட்டத்தின் பதினொன்றாவது ஊரில் வார்னர், வில்லியம்சன் என இருவரின் விக்கெட்டையும் இழந்தது ஹைதராபாத்.


பிரியம் கார்க், அபிஷேக் சர்மா - இளம் கூட்டணி

ஹைதராபாத் அணி ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் இளம் வீரர்களான பிரியம் கார்க் மற்றும் அபிஷேக் சர்மாவின் கூட்டணி 7 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி எதிர்கொள்ள இருந்த மோசமான சரிவை தடுக்க உதவியது. பிரியம் கார்கின் வயது 20 மட்டுமே அபிஷேக் சர்மாவுக்கு 21 வயது.


Twitter பதிவை கடந்து செல்ல, 1


Twitter பதிவின் முடிவு, 1

ஹைதராபாத் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்த போது இவர்களின் கூட்டணி ஹைதராபாத் மீண்டு வர உதவியது.


22 வயதாகும் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீத் கான் விக்கெட்டுகள் எதையும் எடுக்கவில்லை என்றாலும் தாம் வீசிய 4 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.


தமிழக வீரர் நடராஜன்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தந் 29 வயதாகும் கிரிக்கெட் வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக, சென்னையின் ரவீந்திர ஜடேஜா மற்றும் அம்பாட்டி ராயுடு ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


சிஎஸ்கேவை ஹைதராபாத் வீழ்த்தியதில் நடராஜன் பங்கு அதிகம். அவர் 16-வது ஓவர் வீசியபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துருப்புச் சீட்டாக விளங்கும் அம்பாட்டி ராயுடுவை அபாரமாக பந்துவீசி வீழ்த்தினார்.


YouTube பதிவை கடந்து செல்ல, 1


காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ஜடேஜா மெல்ல மெல்ல சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாச துவங்கிய நிலையில் அவரையும் நடராஜன் அவுட் ஆக்கினார்.


எனினும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களிலேயே அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவராக நடராஜன் இருக்கிறார்.


அவர் வீசிய 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்தார். நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களில் நடராஜனின் எக்கானமிதான் மிகவும் அதிகம்.


தொடக்கத்திலேயே சொதப்பிய சிஎஸ்கே

சேசிங்கின் தொடக்கத்தில் களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து சொதப்ப சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


ரவீந்திர ஜடேஜாவும் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஆனாலும் வெற்றியை எட்டுவதற்கு சென்னை அணிக்கு இது உதவவில்லை.


CSK vs SRH

பட மூலாதாரம்,BCCI / IPL

கடைசி 5 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்த சென்னை அணி, அதற்கு முந்தைய 15 ஓவர்களில் 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரம்ப கட்டத்தில் வரிசையாக விக்கெட் விழுந்ததால் மேற்கொண்டு விக்கெட் விடாமல் தடுக்கும் வண்ணம் மிடில் ஓவர்களில் பெரிய ஷாட்களை விளையாடாமல் மெதுவாக விளையாடியது சென்னை.


6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்த சிஎஸ்கே அதற்கடுத்த 9 ஓவர்களில் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்தது.


கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக ஆடினாலும் மிடில் ஓவர்களே சென்னையின் தோல்விக்கு காரணம் என்றால் மிகையாகாது.


புள்ளிப் பட்டியலில் கடைசி இடம்

இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் இருக்கிறது.


Indian Premier League

பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE

சிஎஸ்கே அணியை வென்றதன் மூலம் ஏழாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறிவிட்டது ஹைதராபாத்.


கடைசி இரண்டு இடங்களில் சென்னையும் பஞ்சாபும் ஞாயிற்றுக்கிழமையன்று மோதுகின்றன. இதில் தோற்கும் அணிக்கு இந்த சீசனின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு உள்ளே செல்லும் வாய்ப்பு வெகுவாக குறைந்து விடக்கூடும்.


தொண்டை வறண்டு போகிறது - எம்.எஸ். தோனி

ஆட்டம் முடிந்த பின் பேசிய சென்னை கேப்டன் எம்.எஸ். தோனி "நீண்ட காலத்துக்குப் பிறகு தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்று விட்டோம் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியதிருக்கிறது கேட்ச்களை தவறவிடக்கூடாது. நோ பால் வீசக்கூடாது," என்றார்.


தோனியிடம் சேசிங்கின் இறுதியில் அவர் சோர்வாக உணர்ந்தாரா என்று கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த தோனி, "எல்லாம் சரியாக உள்ளது. ஆனால் இங்கு மிகவும் வறட்சியாக இருக்கிறது. தொண்டை வறண்டு போகிறது," என்று கூறினார்.


தோனியின் தொண்டை மட்டுமல்ல வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களின் மனமும் தற்போது வறண்டுதான் கிடக்கிறது.