புளியம்பத்தையை பதம் பார்த்தது, யானைகள்


 


வி.சுகிர்தகுமார் 


  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியம்பத்தை கிராமத்தில் நேற்றிரவு உள்நுழைந்த மூன்று யானைகள் அங்கிருந்த பயன்தரு தென்னை மரங்களை துவம்சம் செய்ததுடன் பயன்தரு மரங்களை அழிந்துள்ளது.

இதன் காரணமாக அங்கு வாழும் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில் குடியிருப்புக்களை விட்டு வெளியேறப்போவதாக கூறுகின்றனர்.
 
தமது நிலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை எனவும் அரசாங்கம் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

பகல் முழுவதும் அருகில் உள்ள களப்புக்களிலும் சிறிய பற்றைகளுக்குள்ளும் ஒழிந்து கொள்ளும் யானைகள் இரவானதும் குடியிருப்புக்களை நோக்கி படையெடுக்கின்றது. இதனால் மக்களின் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றது.

சொத்துக்கள் ஓருபுறமிருக்க தமது உயிருக்கு உத்தரவாமில்லை என்கிறார் ஒரு குடும்பத்தலைவர். சொத்துக்கள் அழிந்தாலும் உழைத்துக்கொள்ளலாம் ஆனால் எங்கள் உயிர் போனால் யார் குடும்பத்தை காப்பாற்றுவது என அவர் தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினாhர்.

இதேநேரம்  புளியம்பத்தை கிராமத்தை அன்மித்த பிரதேசங்களில் தென்னம் தோட்ட செய்கையில் ஈடுபடும் தோப்பு உரிமையாளர்களும் கவலையடைந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தென்னம் தோப்புக்களை நாளாந்தம் யானைகள் துவம்சம் செய்து வருகின்றது. இந்நிலையில் யானை வேலிகள் அமைக்கும் பணிகளும் முறையாக இடம்பெறவில்லை. இதனால் கிராமத்தி;ற்குள் நுழைந்துள்ள யானைகள் நாளாந்தம் பலரது சொத்துக்களையும் தென்னம் தோப்புக்களையும் அழித்து வருகின்றது.

யானைகளின் தொல்லைகள் நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் விரக்தியடைந்துள்ளதையும் இங்கு காண முடிகின்றது.

இதேநேரம் கிராமத்தின் அருகில் உள்ள களப்பில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதையும் இங்கு காண முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.