அட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் உட்பட ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்



 (க.கிஷாந்தன்)

 

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட  ஐந்து பேர் இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

 

அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர்  சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் கடந்த 16 திகதி மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போது அவர் கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அதன் பின் நடைபெற்ற அரசியல் மற்றும் ஏனைய கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

 

அவருடன் கலந்து கொண்டவர்களே இவ்வாறு இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இதில் முன்னாள் மத்திய மாகாண சபை பிலிப்குமார், அட்டன் டிக்கோயா நகர சபையின் இரண்டு உறுப்பினர் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் இன்று (23) ம் திகதி முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

 

இதே வேளை குறித்த பிரதேச சபை தலைவர் கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலும் தலவாக்கலை மற்றும் கொட்டகலை சி.எல்.எப் ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளதால் அவருடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறைச்சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.