நீதிமன்ற கட்டளையால் இடையில் நிறுத்தம் I


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை  கால்நடையாக மேற்கொண்ட அமைதி வழி போராட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் படி நிறுத்தப்பட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை கால்நடையாகச் சென்று தமது அமைதி வழி போராட்டத்தினை நடாத்தி முடிக்கப்பட்டது.

இன்று (28) திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு கல்முனையில் ஆரம்பமான இந்த நடைபவனி, கல்முனை பிரதேச செயலக வளாகத்தில்   எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்று குறித்த தந்தை மற்றும் மகனால் கையளிக்கப்பட்டு  நடைபாதை ஆரம்பமானது.

பின்னர் கல்முனை பகுதியிhல் அக்கரைப்பற்றினை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளை கல்முனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைய நிறுத்தப்பட்டது.

அதாவது  கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டளைசேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்கள் கையளிக்க ஆயத்தங்கள்  இருந்தும் கல்முனை நகரமண்டபத்துடன் இந்நடை பவனி நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்முனை பொலிஸாரால் நிறுத்தப்பட்டது.

அவ்விடத்திற்கு வருகை தந்த சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் போலீஸாருடன் கலந்துரையாடி  சட்டத்தரணியின்  வாகனத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு அவர்களை அழைத்து வந்தார்.

ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டி மகஜரை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். றிக்காசிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர்.