பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு


 (க.கிஷாந்தன்)


அட்டன் பன்மூர் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றின் அறையில் இருந்து நாகப்பாம்பு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 அடி நீலமான இந்த பாம்பு அறையில் காணப்படும் கட்டு ஒன்றின் மீது காணப்பட்டுள்ளது. இது சாரை பாம்பு என்று ஊகித்த வீட்டு நபர் அதனை பிரம்பு ஒன்றினால் வெளியில் தள்ளிவிட முயற்சித்த போது அது தனது தலையினை விரித்த நிலையில் அது நாகப்பாம்பு என்பதை அறிந்து நிலை தடுமாறியுள்ளார். உடனே தன்னை சுதாகரித்த அவர் தனது சகோதரனின் உதவியுடன் அந்த நாகப்பாம்பை ஒரு பிளாஸ்டிக் வாளியினுள் அதனை செல்ல செய்து பாதுகாப்பாக பிடித்துள்ளார்.

இந்த பிரதேசத்தில் நாகப்பாம்பு காணப்படுவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை காணப்பட்டுள்ள போதும் இன்றே அதனை தாம் நேரில் கண்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனை பார்வையிட அதிகளவானவர்கள் இவரின் வீட்டிற்கு வருகை தந்ததுடன் அவர்கள் நெருக்கமாக காணப்படும் தேயிலை செடிகளிடையே தாம் சென்று கொழுந்து கொய்வதற்கு தற்போது பயம்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் குளிர் காலநிலையில் இவ்வாறான விச பாம்புகள் காணப்படுவது மிக மிக அறிதான விடயமாக உள்ளதுடன் தற்போது நாகபாம்பின் குட்டி கண்டுப்படிக்கப்பட்டுள்ளதானது இப்பகுதி மக்களை பெரும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. பெரிய நாகப்பாம்புகளும் காணப்படக்கூடும் என்று அச்சப்படுகின்றனர்.

இது தொடர்பாக அட்டன் பொலிசாருக்கும் வன ஜீவராசிகள் திணைக்கள காரியாலயத்திற்கும் அறிவித்த நிலையில் அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப இப்பகுதிக்கான கிராம் உத்தியோகத்தருடன் கலந்துரையாடி மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் இதனை பாதுகாப்பாக விடுவதற்கு வீட்டின் உரிமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.