மியன்மாரில் 60 பேர் கட்டுக் கொலை



 மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட தலைவர்கள் ஆயுதப் படைகள் தினத்தை கொண்டாடிய நிலையில், அங்கு ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக இராணுவத்தினர் கட்டவிழ்த்துள்ள வன்முறைகளில் சிக்கி கடந்த 24 மணித்தியாலங்களில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட 28 இடங்களில் சிறுவர்கள் மூவர் உள்ளிட்ட 59 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சில செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

ஜனநாயகத்தை பாதுகாப்பதாக ஆளும் இராணுவத்தளபதி Min Aung Hlaing உறுதியளித்துள்ள நிலையில், இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தலையிலும் முதுகிலும் சுடப்படலாம் என தேசிய தொலைக்காட்சி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், யங்கூன், மண்டலே பகுதி மக்கள் இன்று வீதியில் இறங்கியுள்ளனர்.

பெப்ரவரி முதலாம் திகதி அமுலுக்கு வந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டுத்தாக்குதல்களில் 320-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.