#பங்குடாவெளிச் சந்தியில்,துப்பாக்கிச் சூட்டினால் பரபரப்பு


 


சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், பொலிஸாரின் சமிக்கையை மீறி பயணித்தமையால், அதன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


இச்சம்பவம், மட்டக்களப்பு – கரடியனாறு, பங்குடாவெளிச் சந்தியில், இன்று (12) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



 

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து, உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது, குறித்த உழவு இயந்திரத்தை பொலிஸார் நிறுத்த முயற்சித்துள்ளனர். எனினும், பொலிஸாரின் சமிக்கையை மீறி உழவு இயந்திரம் சென்ற நிலையில், பொலிஸார் அதனை துரத்திச் சென்றுள்ளனர்.


இதனையடுத்து, உழவு இயந்திரம் மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அதில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.



 

செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.துசாந்தன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.