ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?





 ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7 அன்று காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சுமார் 1200 பேரைக் கொன்றனர், நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இத்தாக்குதல் நடந்து ஆறு மாதங்களாகி விட்டன.


இதற்குப் பதிலடியாக, பணயக் கைதிகளை ஹமாஸ் பிடியிலிருந்து விடுவித்து அவர்களை வீடு திரும்பச் செய்வோம் என்றும் “ஹமாஸை அழித்து ஒழிப்போம்” என்றும் இஸ்ரேல் உறுதியளித்தது.


இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போரில், குறைந்தது 33,000 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸா பகுதியின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதாகவும், ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதுடன், காஸாவில் பூமிக்கடியில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.


பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. மேலும், இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தது.


உலக சுகாதார தினம்: மன அழுத்தம், மனச்சோர்வை கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன?

7 ஏப்ரல் 2024

கச்சத்தீவு: இந்திரா காந்தியிடம் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் கூறியது என்ன? இன்றைய ராணி விளக்கம்

6 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

யாஹ்யா சின்வார் உட்பட பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.


எத்தனை ஹமாஸ் தலைவர்கள் இறந்தார்கள்?

அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்னர், காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 30 ஆயிரம் பேர் இருந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளபதிகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.


ஹமாஸின் மிகப்பெரிய தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல மூத்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால், அதன் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பலர் காஸாவிற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.


போர் தொடங்கியதில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.


கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் தலைவர்களின் பெயர்களையும் இஸ்ரேல் வெளியிட்டது.


அக்டோபர் மாதம் முதல் இதுபோன்ற 113 பேரின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் போரின் முதல் மூன்று மாதங்களில் உயிரிழந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் வரை காஸாவில் எந்த மூத்த ஹமாஸ் தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை.


மார்ச் 26 அன்று, ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசாவை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.


இஸ்ரேலில் மிகவும் தேடப்படும் நபராகக் கருதப்படும் இசா, இப்போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்தத் தலைவர் ஆவார்.


அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஹமாஸ் இசாவின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.


கொல்லப்பட்ட மூத்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. ஆனால், இவர்கள் ஹமாஸின் உறுப்பினர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாது.


இப்பட்டியலில் ஹமாஸ் குழுவில் அல்லாதவர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களுள் ஒருவர் ஒருவர் முஸ்தஃபா துரையா. இவர், தெற்கு காஸாவில் சுயாதீன பத்திரிக்கையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, ​​ஜனவரி மாதம் அவரது வாகனம் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானது.


மேலும், இப்பட்டியலில் சிலரது பெயர்கள் இருமுறை குறிப்பிடப்பட்டிருந்தன. அதனால், அவர்களின் பெயர்களை மொத்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை.


காஸாவிற்கு வெளியே உள்ள ஹமாஸின் அரசியல் தலைவரான சலே அல்-அரூரி இந்த ஆண்டு ஜனவரியில் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றது.


எனினும், யாஹ்யா சின்வார் உட்பட காஸாவில் உள்ள பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாக நாங்கள் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.


“ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தால் அடைய முடியவில்லை” என, சர்வதேச நெருக்கடிக் குழுவில் இஸ்ரேல்-பாலத்தீன விவகாரங்கள் குறித்த மூத்த ஆய்வாளர் மைரவ் சோன்ஸ்சீன் கூறினார்.


"ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து அப்பிரதேசத்தை விடுவிப்பதையும் இஸ்ரேலால் இன்னும் சாதிக்க முடியவில்லை" என்று அவர் கூறுகிறார்.


தோனி போல் ருதுராஜ் கெய்க்வாட் சாதிப்பதில் உள்ள 3 முக்கிய சவால்கள் என்ன தெரியுமா?

6 ஏப்ரல் 2024

பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?

6 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

காஸாவில் எத்தனை பணயக்கைதிகள் எஞ்சியுள்ளனர்?

இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7 ஆம் தேதி 253 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களுள், தனித்தனி ஒப்பந்தங்கள் அல்லது கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் கீழ் 109 பேர் விடுவிக்கப்பட்டனர்.


மூன்று பேரை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ராணுவ நடவடிக்கை மூலம் காப்பாற்றியது.


பணயக் கைதிகள் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்ட மூவரும் இவர்களில் அடங்குவர்.


பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுள் உயிருடன் உள்ளவர்களில், இளையவரின் வயது 18 என்றும், மூத்தவரின் வயது 85 என்றும் கூறப்படுகிறது.


மீதமுள்ள 130 பணயக்கைதிகளில், இஸ்ரேலின் கூற்றுப்படி, 34 பேர் இறந்துள்ளனர்.


இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியாது.


ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளம் பணயக்கைதிகள் ஏரியல் மற்றும் ஃபிர். இருவரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நேரத்தில், முறையே 4 வயது மற்றும் 9 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. இருவரும் இப்போது இவ்வுலகில் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் மரணம் உறுதி செய்யப்படவில்லை.


பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?

6 ஏப்ரல் 2024

தமிழர்களின் மாடுகளை சிங்கள விவசாயிகள் கொல்வதாக குற்றச்சாட்டு - மட்டக்களப்பு மக்கள் போராட்டம்

5 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஹமாஸ் தனது சுரங்கப்பாதை வலையமைப்பு 500 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளதாக கூறுகிறது, எனினும் இதை உறுதிப்படுத்த முடியாது.


ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பு எந்தளவுக்கு அழிக்கப்பட்டது?

ஹமாஸை அழிப்பதாக உறுதியளித்ததோடு, காஸாவில் பூமிக்கடியில் அக்குழுவினரின் மிகப்பெரிய சுரங்கப்பாதை வலையமைப்பையும் அழிப்பதாக இஸ்ரேல் உறுதியளித்தது.


ஹமாஸ் இந்த சுரங்கப்பாதைகள் வழியாக உணவு மற்றும் மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.


இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், "காஸா முனையை பொதுமக்களுக்கான ஒரு அடுக்கு என்றும், மற்றொரு அடுக்கு ஹமாஸ் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஹமாஸ் உருவாக்கிய அந்த இரண்டாவது அடுக்கை அடைய முயற்சிக்கிறோம்" என கடந்த அக்டோபரில் தெரிவித்தார்.


காஸாவின் சுரங்கப்பாதை வலையமைப்பு சுமார் 500 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது என்று ஹமாஸ் முன்னதாக கூறியிருந்தது. இருப்பினும், இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க வழி இல்லை.


இதுவரை எத்தனை சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன, அவை மொத்த எண்ணிக்கையில் எவ்வளவு என்று இஸ்ரேல் ராணுவத்திடம் கேட்டோம். அதற்கு, "காஸாவில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளதாக" இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.


ஹமாஸ் சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ளது.


எடுத்துக்காட்டாக, காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அடியில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியின் வீடியோ காட்சிகளை நவம்பரில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.


இஸ்ரேல் ராணுவத்தின்படி, அது ஹமாஸின் கட்டளை மையமாக பயன்படுத்தப்பட்டது.


இஸ்ரேல் ராணுவம் இதுவரை எத்தனை நீண்ட சுரங்கப்பாதைகளை கண்டறிந்துள்ளது என்பதை அறிய, காஸாவின் சுரங்கப்பாதைகள் தொடர்பாக அக்டோபர் 7, 2023 மற்றும் மார்ச் 26, 2024 வரை அதன் சமூக ஊடக தளங்களிலும், டெலிகிராமிலும் வெளியிடப்பட்ட செய்திகளை பிபிசி சரிபார்த்தது.


இதில், 198 செய்திகளில், சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் இருந்தன. மற்றொரு 141 செய்திகள், சுரங்கப்பாதையை அழித்தது அல்லது செயலிழக்கச் செய்தது குறித்துக் கூறுகின்றன.


இந்த செய்திகளில் பெரும்பாலானவை சுரங்கப்பாதைகளின் இருப்பிடம் தொடர்பான துல்லியமான விவரங்களை வழங்கவில்லை. எனவே, இஸ்ரேல் ராணுவம் எத்தனை சுரங்கங்களை கண்டுபிடித்தது அல்லது அழித்தது என்பதை உறுதிப்படுத்த முடியாது.


காஸாவில் பூமிக்கடியில் உள்ள இந்த வலைப்பின்னல் அமைப்பிலான சுரங்கப்பாதை பாதைகளில் வெவ்வேறு அளவுகளில் அறைகள், அத்துடன் சுரங்கப்பாதை மேற்பரப்பை சந்திக்கும் ஒரு புள்ளி உட்பட பல கூறுகளால் ஆனது.


நாங்கள் பகுப்பாய்வு செய்த செய்திகளில், 36 செய்திகள், மொத்தம் 400 சுரங்கவாயிற்குழிகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேலின் ரீச்மேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சுரங்கப்பாதை வழி போர்களில் நிபுணருமான டாக்டர். டாப்னே ரிச்மண்ட், ஒரு சுரங்கவாயிற்குழியை சுரங்கப்பாதையுடன் ஒன்றாக தொடர்புப்படுத்துவது தவறாக வழிநடத்தும் என்று கூறுகிறார்.


இந்த சுரங்கவாயிற்குழிகளை அழித்த பிறகும் சுரங்கப்பாதை வலையமைப்பு அப்படியே உள்ளது என்று அவர் கூறுகிறார். "இந்தப் போரில் சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.


அமெரிக்கா மோதி அரசை எதிர்க்கிறதா? சிஏஏ, அரவிந்த் கேஜ்ரிவால் விவகாரங்களில் தலையிடுவது ஏன்?

5 ஏப்ரல் 2024

உடலில் பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் நபர் - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்

5 ஏப்ரல் 2024

போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

காஸாவில் பெரும்பாலான கட்டடங்கள் அழிக்கப்பட்டன.


பாலத்தீனர்களுக்கு ஏற்பட்ட இழப்பு

காஸாவில் வாழும் பாலத்தீனர்கள் இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று.


ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


ஏப்ரல் 5 அன்று அமைச்சகம் வெளியிட்ட தரவின் படி, கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதைக் காட்டுகிறது.


ஹமாஸ் இலக்குகளை அழிக்க இஸ்ரேலிய படைகளின் முயற்சிகளுக்கு மத்தியில் பலர் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


குடியிருப்புப் பகுதிகள் பாழடைந்து, பரபரப்பாக இருந்த சாலைகள் தற்போது ஒன்றும் இல்லாமல் ஆகியுள்ளன.


கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.


அக்டோபர் 7 முதல், காஸாவின் 56 சதவீத கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.


போர் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகும், இஸ்ரேல் தனது போர் நோக்கங்களை அடைந்துவிட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை