ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை




 பாறுக் ஷிஹான்


ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின்   பல்வேறு  இடங்களில்  இன்று   சிறப்பாக நடைபெற்றன.

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள்  தொழுகையும் குத்பா பிரசங்கமும்   அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று   நடைபெற்றது.

மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில்  மருதமுனை தாறுல்ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பிரதிப்பணிப்பாளர் நுவீஸ் மக்கி தொழுகையினை நடத்தி வைத்ததுடன் குத்பா பிரசாரத்தினையும் நிகழ்த்தினார்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும்  பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.

 மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித   பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது  பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .

இதனை தொடர்ந்து  தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள்  நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .