அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் உயர்நீதிமன்றம் விஷேட தீர்ப்பு



 


அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், பொலிஸார் அவரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 


தடுப்புக்காவலில் இருந்த வசந்த முதலிகே சார்பில் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர்நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா இந்தத் தீர்ப்பை வழங்கினார். 


2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, அதன் அப்போதைய ஒருங்கிணைப்பாளரான வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.


இதனை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


நீண்ட விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகேயை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குத் தேவையான நியாயமான சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பிரதிவாதிகள் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டியது. 


அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க பிரதிவாதிகள் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.