பசிபிக் பெருங்கடலில் படகு கவிழ்ந்ததால் ஐஸ் பெட்டியில் 5 நாள் தத்தளித்த மீனவர்கள்



 


மெக்சிகோவில் ஒரு குளிரூட்டும் பெட்டியைப் பிடித்துக்கொண்டு நடுக்கடலில் 5 நாட்கள் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 19) மெக்சிகோ கடற்படையினர் அவர்களை மீட்கும் வரை, அவர்கள் அந்தப் பெட்டியின் உதவியுடன் தான் கடலில் மிதந்து தப்பித்துள்ளனர்.


இது மெக்சிகோவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள சியாபாஸ் மாகாணம், டோனாலா பகுதியைச் சேர்ந்த 53 வயதான டேனியல் குரேரோ மார்டினெஸ் மற்றும் 32 வயதான ஜோஸ் லூயிஸ் போர்டெலாஸ் ஆகியோரின் கதையாகும்.


மீட்கப்பட்ட பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய மார்டினெஸ், "என் குடும்பத்தினரை நான் மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை" என்று கூறினார்.


ஐந்து நாட்களாக உணவு இல்லாததால் நீர்ச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இந்த மீனவர்கள், தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து ஓய்வெடுத்து வருகின்றனர்.


தேடுதல் வேட்டையை விரிவுபடுத்துவதற்காக கடற்படையினர் 'டிரிநாமியல்' (Trinomial) எனப்படும் ஒரு திட்டத்தைப் பயன்படுத்தினர். இத்திட்டத்தில் ஒரு ரோந்துக் கப்பல், ஒரு இடைமறிக்கும் கப்பல் மற்றும் ஒரு விமானம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது.


மீனவர்கள் தங்களிடம் இருந்த ஒரு சாக்குப் பையை அசைத்து விமானத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததாகப் பின்னர் தெரிவித்தனர்.


கடற்படை வெளியிட்டுள்ள காணொளிகளில், பல நாட்கள் கடலில் மிதக்க உதவிய அந்த நீல நிறக் குளிரூட்டும் பெட்டியை அந்த இரு மீனவர்களும் பிடித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.


உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டதைத் தொடர்ந்து, கடற்படையினர் தேடுதல் பணியைத் தொடங்கினர்.

பசிபிக் பெருங்கடலில் தத்தளிப்பு

பரேடோன் என்பது மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மீனவ கிராமமாகும். இது கடலுக்கும் அப்பகுதியின் காயல்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியின் பொருளாதாரம் பெரும்பாலும் இறால், மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ளது.