இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பின் மேற்கு எல்லையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு வனவளம் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் துரைராஜசிங்கம் கூறுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், செங்கலடி பிரதேச செயலாளர் ஆகியோருடன் அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதாக கூறும் அமைச்சர் துரைராஜசிங்கம் இந்த வன-அழிப்பை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை சிங்கள சமூகத்தினரே மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.
மேற்கு எல்லையில் அடையாளம் காணப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் காணி மட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை காணி எனவும் தற்போது அங்கு நடந்துள்ள காடழிப்பினால் மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் அச்சுறுத்தல்களையும் கால்நடை இழப்புக்களையும் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் பௌத்த பிக்குகள் இருப்பதை தாம் அறிந்து கொண்டதாக துரைராஜசிங்கம்தெரிவித்தார்.
அங்கு சில நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புக்கள் தற்போது காணப்பட்டாலும் எதிர்காலத்தில் அங்கு சிங்கள மக்களின் திட்டமிட்ட குடியேற்றத்திற்கான அறிகுறிகளாகவே அவற்றைக் கருத வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பௌத்த பிக்கு ஒருவர் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் பௌத்த வழிபாட்டு தலமொன்றிக்கான அடித்தளமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறுகின்றார்.

