மோதலில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகளை நீக்க வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்



அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புபட்ட மக்கள் பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி, ஜெரப் அலகரத்னத்தின் கையொப்பத்துடன் இன்று பிற்பகல் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இவ்வாறு மோதிக்கொள்வது தேசத்திற்கே அபகரீத்தியை ஏற்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக உடனடியாக ஒழுக்காற்றுக் கொள்கையொன்றை அறிமுகம் செய்து அதனைக் கண்காணிப்பதற்காக சுயாதீன நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவராவது ஒரு உறுப்பினர் அந்தக் கொள்கைகளை மீறுவாராக இருந்தால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து அவரைப் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தகுதியானவர்களை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்வது மக்களின் பொறுப்பு எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.