கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து கடந்த டிசெம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்திருந்த ‘கலைஞர் சுவதம்’ வேலைத்திட்டத்தில் பங்கெடுத்த ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுப்பொதிகளும் வழங்கும் வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (04) காலை நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கலந்துகொண்ட இலக்கியம், சோதிடம் மற்றும் பாரம்பரிய வைத்தியத் துறைகளைச் சார்ந்த கலைஞர்கள் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மத்தியில் இலக்கிய ஆர்வத்தை அதிகப்படுத்துவற்காக முன்னெடுக்கப்படவேண்டிய காத்திரமான நடவடிக்கைகள் தொடர்பாகப் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. நவப்பிரியா பிரசாந்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த வைபவத்தில் கலாசார உத்தியோகத்தர் திருமதி. ரி.ராதிகாவும் கலந்துகொண்டு தமது திணைக்களத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச கலாசார அபிவிருத்தி தொடர்பில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் அங்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
