தென் கொரியாவிற்கு தொழிலுக்கு செல்வோருக்கான நற்செய்தி



தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களிடம் 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு பணம் அறவிடப்படுவதை உடனடியாக இரத்து செய்வதற்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தீர்மானித்துள்ளார். 

அமைச்சரின் ஆலோசனைப் படி இன்று முதல் அதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. 

தென் கொரியாவிற்கு சட்ட ரீதியாக செல்லும் தொழிலாளர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கின்ற பிணைப் பத்திரங்களுக்கு மேலதிகமாக இந்தப் பணம் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும் இந்த தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ள அமைச்சர் தலதா அத்துகோரல, இது தொடர்பில் கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு அறிவிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. 

தற்போது தென் கொரியாவில் சுமார் 26,000 இலங்கை தொழிலாளர்கள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு 6629 பேர் தொழிலுக்காக அங்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.