கத்தார் ரியாலை பறிமாற்றுவதற்கு மறுப்பு



கட்டார் ரியால்களை இலங்கை ரூபாவாக பறிமாற்ற முடியாமற் கட்டாரிலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை பிரஜைகள் இன்று அதிகாலை பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
விமான நிலையத்திலுள்ள வங்கிக் கிளைகளில் கட்டார் ரியாலை பறிமாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக அவர்கள் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளரிடம் நாம் வினவினோம்.
கட்டாரிலிருந்து வருகை தந்த இலங்கை பிரஜைகள் இந்த விடயம் குறித்து தம்மிடம் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்பிரகாரம், விமான நிலையத்திலுள்ள வணிக வங்கிகளின் கிளைகளிடம் இது குறித்து வினவியதாக முகாமையாளர் தெரிவித்தார்.
மறுஅறிவித்தல் வரை கட்டார் ரியாலை பறிமாற்ற வேண்டாம் என மத்திய வங்கி தமக்கு அறிவித்துள்ளதாக குறித்த வணிக வங்கிகள் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளன.
6 நாடுகள், கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்டதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கட்டார் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவை வழமைபோன்று இடம்பெறுவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.