அம்பாறையில் பெரும்போகம் வீழ்ச்சி



அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை வீழ்ச்சியடைந்திருப்பதாக, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.
 இம்முறை நிலவிய கடுமையான வரட்சி, குறைந்தளவிலான பருவகால மழை வீழ்ச்சி போன்ற காரணங்களால் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதே, இதற்குப் பிரதான காரணமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.
சேனாநாயக்க  சமுத்திரத்தின் நீர்மட்டம் 770,000 ஏக்கர் சதுர அடியிலிருந்து 59,000 ஏக்கர் சதுர அடிக்கு குறைந்துள்ளதாகவும் இதனால் நெற்செய்கைக்கு வழமையாக அனுமதியளிக்கப்பட்டு வந்த காணியின் அளவிலிருந்து இம்முறை 20 சதவீதம் குறைத்தே அனுமதி வழங்கப்படுவதற்கான சாத்தியமுள்ளதாகவும் விவசாயப் பணிப்பாளர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் பிரதான தொழில் துறையாக விளங்கும் நெற்செய்கை, நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை செய்து வருவது மட்டுமல்லாமல், அதிக வருமானமீட்டும் தொழிலாகவும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை பெரும்போக நெற்செய்கையின் பொருட்டு எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்துக்கான விவசாய ஆரம்பக் கூட்டங்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், நெற்செய்கை விதைப்புக்கான காலப்பகுதி மற்றும் செய்கை பண்ணும் காணியின் அளவு என்பன இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.