ஐதேகவிடம் நாம் எதனையும் அடகு வைக்கவில்லை



அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலுமே, ஐக்கிய தேசியக் கட்சியோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றது என, அக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

அம்பாறை - சம்மாந்துறையில் நேற்று இரவு இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில இடங்களில் மரச் சின்னத்தில் தனித்தும், அம்பாறை மாவட்டம் உட்பட இன்னும் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து யானை சின்னத்திலும், ஒரு சில இடங்களில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிலும் மற்றும் சில இடங்களில் துஆ எனும் ஜனநாயக ஐக்கிய முன்னணியிலும் இணைந்து நான்கு விதமாக போட்டியிடுகின்றது. 

முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்ற முடிவானது, மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு எல்லோராலும் எடுக்கப்பட்ட முடிவாகும். 

இந்த இணைப்பின் மூலம் எமது கட்சிக்கு கிடைக்கின்ற வாக்குகளைக் கூட்டிக் கொள்வதற்குத் தேவையான வியூகங்களை வகுப்பதற்காகவே தவிர, ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் எதனையும் அடகு வைக்கவில்லை என்பதை நான் மிகவும் தெளிவாகவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள் தான் தெரிவு செய்துள்ளோம். 

அந்தளவு அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் எங்களுக்கு தந்துள்ளது. 

அந்த உரிமையுடன் தான் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறோம். 

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அனைத்து சபைகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை நாங்கள் தான் தயாரித்திருக்கிறோம். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முகவர்களாக எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், என்றார். 

(அம்பாறை நிருபர் அஸ்லம்)