நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராக நாடாளுமன்றத்தில், இன்று (புதன்கிழமை) நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கை
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடியது.
இலங்கைபிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்ததாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணையை உறுதிப்படுத்திய ஆவணம் தன்னிடம் வழங்கப்பட்டதாகவும் சபாநாயகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, உறுப்பினர்களின் கையெழுத்துடன் இதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறியதா?
காலை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ராஜ்பக்ஷவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக ஊடகத்திடம் தெரிவித்தார் ரணில் விக்கரமசிங்க.
பிரதமர் ராஜபக்ஷவுக்கும், அவரது அரசுக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் ஓட்டில் வெற்றி பெற்றதாக எதிர்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தனை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் செய்தி முகமை செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்றத்துக்குப் பாராட்டு
முன்னதாக, பல நாள்களாக நிலவிய அரசியல் உறுதியற்ற நிலைக்குப் பிறகு தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையை தேவையான அவசரத்துடனும், விரிவாகவும் அணுகி, நிலைமைக்கேற்ப செயல்பட்ட நீதித்துறை குறித்து தற்போது பொதுமக்கள் பெருமை கொள்ளலாம் என்று கரு ஜெயசூர்ய தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தற்போதைய அரசாங்கம் சட்டபூர்வமாக செல்லத்தக்கதா என்பதைப் பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முடிவெடுப்பதற்கு தற்போது நாடாளுமன்றம் வழிவகை செய்யவேண்டும் என்றும் கரு.ஜெயசூர்ய குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய நாளின் நிகழ்வுகள் குறித்து மக்கள் ஆறுதல் கொள்ளலாம் என்று கூறிய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதான தமது நம்பிக்கையையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பொதுமக்களும், குறிப்பாக பொறுப்புள்ள பதவிகளில் உள்ளவர்களும் தேவையற்ற தூண்டுதல்களையும், நிச்சயமற்ற தன்மையையும் தவிர்க்கும் பொருட்டு அமைதியாகவும், கண்ணியத்துடனும் நடந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எல்லா இலங்கையர்களும், நீதிமன்றத்தின், நாடாளுமன்றத்தின் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.