கோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு அதிகம் செலவு செய்தவர்


எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையமான தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கொழும்பில் நவம்பர் 5 அன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை வரலாற்றில் முதல் தடவையாக வெளியிட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளினால் கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையான செலவீனங்களை அந்த நிலையம் வெளியிட்டது.
குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட்சிகளும் சுமார் 962 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 574 மில்லியன் ரூபாய் இந்த காலப் பகுதிக்குள் மாத்திரம் செலவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோன்று சஜித் பிரேமதாஸ போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 372 மில்லியன் ரூபாய் குறித்த காலப் பகுதியில் மாத்திரம் செலவிட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அநுர குமார திஸாநாயக்கபடத்தின் காப்புரிமைJVP
Image captionஅநுர குமார திஸாநாயக்க
அதேபோன்று அநுர குமார திஸாநாயக்க போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி இந்த காலப் பகுதியில் 16 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
அச்சு ஊடகம், ஒளிபரப்பு ஊடகம், சமூக ஊடகம் மற்றும் ஏனைய செலவுகள் (கூட்டங்கள், ஊர்வலங்கள், காட்சிப் பொருட்கள், அரச சொத்துகளின் துஷ்பிரயோகச் செலவுகள்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் இந்த செலவீன அறிக்கையை தயாரித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) ஆகியன ஒளிபரப்பு ஊடகத்திற்காகவே அதிகளவிலான செலவீனங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒளிபரப்பு ஊடகத்திற்காக 456 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 219 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளது.
அதேபோன்று தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) ஒளிபரப்பு ஊடகத்திற்காக 4 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கள ரீதியான பிரசாரத்திற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 76 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ள அதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) கள ரீதியான பிரசாரத்திற்கு 85 மில்லியன் ரூபாவை செலவீனம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி கள ரீதியான பிரசாரத்திற்காக 11 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளது.
அத்துடன், அச்சு ஊடக பிரசாரத்திற்காக புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 68 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அச்சு ஊடகத்திற்காக 42 மில்லியன் ரூபாயை செலவீனம் செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) அச்சு ஊடகத்திற்காக ஒரு மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது.
Presentational grey line

சமூக ஊடக பயன்பாடு

சமூக ஊடகத்தின் ஊடாக இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது,
இதன்படி, ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவிலான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணியும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை குறிப்பிடத்தக்களவு பயன்படுத்தியுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 35 வேட்பாளர்கள் மூன்று பிரதான வேட்பாளர்களின் செலவீனங்கள் இவ்வாறு இருக்க, ஏனைய வேட்பாளர்கள் ஒட்டு மொத்தமாக சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதாக அந்த நிலையம் கணிப்பீடு செய்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க மற்றும் இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளரான அஜந்த பெரேரா ஆகியோர் சுமார் நான்கு மில்லியன் ரூபாயும் தேர்தல் பிரசாரத்திற்காக செலவீனம் செய்துள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.
ஏனைய வேட்பாளர்கள் மிகவும் சிறியளவிலான தொகையை செலவீனம் செய்தே, தமது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது.
சமூக ஊடக பயன்பாடு
குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 60 வீதமான செலவீனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 39 வீதமான செலவீனங்களையும், தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுர குமார திஸாநாயக்க ஒரு வீதமான செலவீனங்களையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சமூக வலைத்தளங்களில் செலவிடப்பட்ட செலவீனங்கள் மற்றும் வானொலிகளில் பிரசாரத்திற்காக செலவிடப்பட்ட செலவீனங்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.
எதிர்வரும் சில தினங்களில் முழுமையாக செலவீனங்கள் தொடர்பான தகவல்களை திரட்டி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக அந்த நிலையத்தின் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் இந்த தேர்தல் காலப் பகுதியில் மாத்திரம் சுமார் 10 பில்லியன் ரூபாய் செலவீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் நிதியாக்க செலவுகள் என்பவை யாவை?

தேர்தல் நிதியாக்க செலவுகள் என்பவை யாவை?
வேட்பாளர் ஒருவரால் அல்லது அவர் சார்பாக பின்வருபவற்றுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்…
01. அந்தத் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் அல்லது துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை அச்சடித்தல், வெளியிடுதல், விளம்பரங்கள், கைப்பிரசுரங்கள், கொடிகள், படங்கள், புகைப்படங்கள், சுலோக அட்டைகள் அல்லது சுவரொட்டிகள் என்பவற்றை காட்சிப்படுத்துதல் அல்லது பார்வைக்கு வைத்தல்.
02. தேர்தல் தொடர்பான விளம்பரங்களைத் தயாரித்தல் மற்றும் வானொலி அல்லது தொலைக்காட்சி என்பவற்றில் அவற்றை ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்தல்.
03. தேர்தல் தொடர்பான விளம்பரங்களைத் தயாரித்தல் மற்றும் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் அல்லது ஏனைய வெளியீடுகளில் பிரசுரித்தல்.
04. தேர்தல் தொடர்பான கூட்டங்களை வைப்பதற்காக ஏதேனும் இடத்தை அல்லது உபகரணத்தை வாடகைகக்கு பெறுதல் அல்லது பயன்படுத்துதல்.
05.வேட்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் என்பவற்றை வாடகைக்கு அமர்த்துதல் போன்ற போக்குவரத்துச் செலவுகள். (மேற்குறிப்பிட்டவற்றுள் உள்ளடங்காதவை)
06. பொது மூலவளங்களைத் துஷ்பிரயோகிப்பதின் மூலமாக தனிப்பட்ட பிரசாரங்களுக்காக அரசு அல்லது மக்களால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள்.
Presentational grey line

தேர்தல்களில் பிரசார நிதியாக்கம் ஏன் ஒரு பிரச்சனையாக உள்ளது?

01. தேர்தல் செயன்முறையின் போது மற்றைய வேட்பாளர்களை தேர்தலில் இருந்து விலகச் செய்யும் ஒரு விதத்தில் சில வேட்பாளர்கள் நிதியை உபயோகிப்பதற்கு இயலுமாக இருப்பதால், கட்டுப்படுத்தப்படாத அல்லது மட்டுப்பாடற்ற நிதிச் செலவீனங்கள் ஜனநாயகத் தேர்தல்களை மோசமான வகையில் பாதிக்க முடியும்.
02. மட்டுப்பாடற்ற அல்லது கட்டுப்படுத்தப்படாத பிரசார நிதியாக்கம் தேர்தல் செய்முறையின் போது வேட்பாளர்கள் மத்தியில் ஒரு சமனற்ற போட்டிக் களத்தை உருவாக்கும்.
03. அது ஊழல், லஞ்சம், அரச சொத்துகளின் துஷ்பிரயோகம், பாரபட்சம் மற்றும் வன்முறைகள் என்பவற்றுக்கு இட்டுச் செல்கிறது.
இலங்கையில், பிரசார நிதியாக்கம் தொடர்பில் சட்டமோ அல்லது கட்டுப்பாட்டு பொறிமுறையோ இல்லை என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது.
இதன்படி, இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களில் செலவீனங்கள் தொடர்பான வரையறையொன்றை வைக்க வேண்டிய வகையில் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்துகின்றது.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் இறுதியாக கேள்வியொன்றை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளிடம் தொடுக்கின்றது.
இந்த நிதிகளுக்கான மூலஙகள் எவை? என்ற கேள்வியையே தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் தொடுக்கின்றது.