'ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும்'


நடிகர் ரஜினிகாந்தை சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்று கூறுபவர்கள் அவரை ஒருமுறை நேரடியாக சந்தித்து பேசினால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் என இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களே அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள் என்றும், தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத தாம் ஏதோ பெரிய தவறை செய்ததுபோல பேசப்படுவது விந்தையாக இருக்கிறது என்றும் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் நடிகர் ரஜனிகாந்தை விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் இச்சந்திப்பு தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் மேற்கொண்டு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு.
ரஜினியை நான் சென்று பார்த்து வந்தது உண்மையே. அது ஒரு தனிப்பட்ட விஜயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. பத்திரிகைகளில் கூறுவது போல் நான் ரஜனியை இலங்கைக்கு வருமாறு அழைப்பேதும் விடுக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் நாங்கள் அளவளாவினோம்.
ரஜினியை சந்திக்க சென்றதும் அவரது அலுவலகத்தில் பாபாஜியின் படமும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் படமும், யோகாநந்த பரமஹம்சரின் படமும், எம் நாட்டு சுவாமி சச்சிதானந்த யோகியின் படமும் சுவரில் தொங்கவிடப்பட்டு இருந்தன.
உடனே எங்கள் பேச்சுக்கள் ஆன்மீகப் பெரியார்கள் பற்றியும் உலக நியதிகள், போக்குகள், வாஸ்தவங்கள், நடைமுறைகள், யதார்த்தங்கள் சார்ந்து பேசப்பட்டன.
Justice C.V Wigneswaran Rajinikanth
ரஜினி சம்பந்தமாகப் பலவித கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. எனினும் நான் பின்வரும் குணாதிசயங்களை அவரிடம் நேரில் கண்டேன்.
அவரின் அன்பு,எளிமை, ஆன்ம விசாரத்தில் உள்ள நாட்டம், குழந்தைகள் போல் வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய இறுக்கம் தவிர்ந்த சுபாவம், அசைக்க முடியாத இறை நம்பிக்கை, தாமரை மேல் நீர் போன்ற வாழ்க்கை, இயற்கையாகவே உடலிலும் பேச்சிலும் ஒரு வேகம் போன்ற குணாதிசயங்களை அவரிடம் கண்டேன்.
ரஜினி பந்தாவே இல்லாத மனிதர் எனக் கண்டு உண்மையில் வியப்படைந்தேன். சிறிய புகழை, பதவியை அடைந்து விட்டாலே பலர் தலை கால் தெரியாது ஆடுகின்றார்கள். பாரதம் கடந்து ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு திரைப்படக் கலைஞர் என்ற முறையில் அவர் பலத்த 'பந்தா' காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.
எந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராக அவரைக் கண்டேன்.
ரஜினியைச் சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொண்டேன். அந்தச் சிறந்த மனிதரின் சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.